அம்பிகையின் அறப்போர் குறித்து பிரித்தானியா மௌனமாக இருப்பதே வேதனை -சிவசக்தி ஆனந்தன்

தாயக உறவுகளுக்கு நீதி வேண்டி இரண்டு வாரங்கள் கடந்து அறப்போர் நடத்திவரும் அம்பிகை செல்வகுமாரின் உடல்நிலைமை மோசமடைந்துள்ள நிலையில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வேதனையளிப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ளள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தலைமையில் கொண்டுவரப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல் எனும் தலைப்பிலான பிரேரணையில் தமிழனத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் உள்ளிட்ட நான்கு அம்சக்கோரிக்களை முன்வைத்து கடந்த 15 நாட்களாக அஹிம்சை வழியில் போராட்டத்தினை நடத்தி வருகின்றார்.

இவருடைய போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாகவும், அவருடைய நான்கு அம்சக்கோரிக்கைகளுக்கு மேலும் ஆதரவளித்தும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் தொடர்ச்சியான உண்ணாவிரதப்போராட்டங்கள், கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன.

தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி கோரி தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றபோதும் அரசாங்கமும், சர்வதேசமும் அமைதியாகவே இருக்கின்றமை துரதிஷ்டவமானது.

விசேடமாக அம்பிகை செல்வகுமார், உலகிற்கு ஜனநாயக விழுமியக் கற்பிதங்களை வழங்கும் பிரித்தானியாவில் தனது அறப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். தற்போது வரையில் ஓரிரு பாராளுமன்ற உறுப்பினர்களே தற்துணிவின் அடிப்படையில் ஆதரவுக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியாக மௌனித்த நிலையிலேயே இருக்கின்றது. இவ்விதமான நிலையில் பிரித்தானிய அரசாங்கம் இருப்பதானது அதிர்ச்சியையும் வேதனையும் அளிப்பதாக உள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போரின் போது நிகழ்த்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிரித்தானியா அறியாமலில்லை. அதுபற்றி ஆவணங்களையும் பிரித்தானியா கொண்டிருக்காமல் இல்லை. அதேநேரம் நீதியை எதிர்பார்த்திருக்கும் தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களையும், கோரிக்கைகளையும் பிரித்தானியா உணரமலில்லை.

அவ்வாறான நிலையில் நியாயமான நீதியொன்றை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும் வகையில் அம்பிகை செல்வகுமார் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் உள்ளீத்து நிறைவேற்றப்படவுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் பிரேரணையை மேலும் வலுப்படுத்த வேண்டும். அவ்விதமான செயற்பாடே ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்காலத்தினை உறுதிப்படுத்துவாக இருக்கும் என்றுள்ளது.