ஈராக்கில் ஷியா மூத்த தலைவருடன் திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பு

கொரோனாவுக்குப் பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக ஈராக் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், ஈராக் பிரதமர் முஸ்தபா, அதிபர் பர்ஹம் சாலிஹ் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஈராக் பயணம் குறித்து திருத்தந்தை கூறுகையில், “ஈராக் வந்ததில் மகிழ்ச்சி. இந்நாட்டில் ஆயுத மோதல் ஏற்படாமல் அமைதி நிலைக்கட்டும். வன்முறை மற்றும் தீவிரவாதச் செயல்களுக்கு முடிவு கிடைக்கட்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து திருத்தந்தை , இராக்கின் மூத்த ஷியா தலைவரான அயத்துல்லா அலி அல் சிஸ்தானியைச் சந்தித்தார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது.

இச்சந்திப்பு குறித்து அயத்துல்லா அலி அல் சிஸ்தானி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ இச்சந்திப்பில்   ஈராக்கியர்களைப் போல இங்கு வசிக்கும் கிறிஸ்தவர்களும் அமைதியான மற்றும் பாதுகாப்பான வாழ்வைப் பெற்றிட வேண்டும். அவர்கள் அரசியல் உரிமைகளுடன் வாழ வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சில வருடங்களாக சிறுபான்மை மக்கள் மீது செலுத்தப்படும் தாக்குதலுக்கு குரல் கொடுத்ததற்காக சிஸ்தானிக்கு  திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி தெரிவித்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது.