மியான்மரில் பத்திரிகையாளர்கள் கைது- விடுதலை செய்யுமாறு பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை

மியான்மர் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும்  பத்திரிகையாளர்கள் சங்கம் தரப்பில்,

“அனைவரையும் எங்கள் பிரசாரத்தில் கலந்துகொள்ள கேட்டுக் கொள்கிறோம். இதழியல் என்பது குற்றச் செயல் அல்ல. மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தைப் பதிவு செய்ததால் கைது செய்யப்பட்ட தெய்ன் ஸா உள்ளிட்ட 5 பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தெய்ன் ஸா உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் பொது சட்ட விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  மியான்மர் இராணுவத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மியான்மரில் இளம் போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மியான்மரில் இராணுவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் இதுவரை 50க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.