கோவிட் 19 வைரஸ் தாக்கி உயிரிழப்பவர்களின் ஜனாச்சாக்களை அடக்கம் செய்யும் பணி இன்று முதல் ஆரம்பம் – சுகாதார அமைச்சு

கோவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை இன்று முதல் அடக்கம் செய்யும் பணிகள் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள இடமொன்றில் இரண்டு உடல்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டமாவடி மஜ்மா நகரில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் முதலாவது ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி மஜ்மா நகர் அபிவிருத்தி சங்க தலைவர் சமீம் உறுதிப்படுத்தினார்.

மேலும் கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை கடுமையான சுகாதார பாதுகாப்பு முறைமையின் கீழ், பிரதேசத்தின் சுகாதார அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெறுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.