மியான்மரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 இலங்கை மீனவர்கள்

மியான்மரில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறீலங்கா மீனவர்கள் அந்நாட்டு நீதி மன்றத்தில்  முற்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன் படி கடந்த மாதம், தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 மீனவர்களே நேற்றைய தினம் நீதி மன்றத்தின் முன்னிலையில் இவ்வாறு முற்படுத்தப்பட்டுள்ளதாக மியான்மருக்கான சிறீலங்கா துாதுவர் நளினி டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் போது மீனவர்களுக்கான விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டதாகவும் கூறிய அவர், மீனவர்களில் உடல் நிலை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் இரண்டு கப்பல்களில் மியான்மர் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த  குறித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை இந்த மீனவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.