பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டில் பிரான்ஸ் அதிபர் பதவியை நிறைவு செய்த பிறகு, வேறொரு வழக்கின் தகவலுக்கு உபகாரமாக மதிப்புமிகு வேலை கிடைக்க உதவி செய்வதாக ஒரு நீதிபதிக்கு லஞ்ச பேரம் பேசியதாக சர்கோஸீ மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில்  66 வயதாகும் சர்கோஸீக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில்,  பிரான்ஸில் சிறைத் தண்டனை பெறும் முதலாவது முன்னாள் அதிபராகியுள்ளார் அவர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்த தீர்ப்பை எதிர்த்து சர்கோஸீ சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த மேல்முறையீடு நடைமுறை காரணமாக, அதில் முடிவெடுக்கப்படும்வரை சர்கோஸீ சிறையில் அடைக்கப்படமாட்டார் என்றும் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் சர்கோஸீக்கு எதிராக நீதிபதி கிறிஸ்டைன் மீ அளித்த தீர்ப்பில், “தான் தவறு செய்கிறோம் என்பதை கன்சர்வேட்டிவ் அரசியல்வாதி நன்றாகவே அறிந்திருந்தார். அவரது செயல்பாடுகளும் அவரது வழக்கறிஞரின் செயலும் பொதுமக்கள் மத்தியில் நீதித்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டன,” என கூறியுள்ளார்.