யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி நகரிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றினூடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் இதய சுத்தியுடன் செயற்பட்டு இலங்கை அரசு மீதான காத்திரமான நிலைப்பாட்டை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியில் தொடங்கியுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் தொடங்கிய போராட்டம் கிளிநொச்சி பழைய கச்சேரி வரையான பகுதிவரை நகர்கிறது.

போராட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.