ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மீது விவாதம் நடத்த அரசாங்கம் தயார் – தினேஷ் குணவர்த்தன

ஈஸ்டர் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த ஆளும் தரப்பு தயாராகவுள்ளது என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றுப் பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும், “ஈஸ்டர் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை மீது விவாதம் நடத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லை. முன்னர் குறிப்பிட்டபடி விவாதம் நடத்தப்படும்” என்றார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவால் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிமூல பிரதிகள் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டன.