தமிழ் அரசுக் கட்சிக்குள் எந்த அணியும் இல்லை – ஊடகங்கள் மீது சீ.வீ.கே. சீற்றம்

சுமந்திரன் அணி, மாவை அணி என்று தமிழ் அரசுக் கட்சிக்குள் எந்த அணியும் இல்லை. எமது கட்சிக்குள் பல அணிகள் உள்ளன என்று மற்றவர்கள் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று ஒன்றிணைந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஒன்றிணைந்த அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் சுமந்திரன் சார்ந்த அணியினர் கலந்துகொள்வதில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சுமந்திரன் அணி, மாவை அணி என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்குள் அணிகள் இல்லை. ஊடகங்கள் தான் அவ்வாறு அணிகள் உள்ளன எனத் தெரிவிக்கின்றன. ஆனால், எமது கட்சிக்குள் எந்தவித அணியும் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.