இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

இலங்கை கடற் படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

கடந்த 18ஆம் தேதி காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடி விசைப்படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம்சன் டார்வின் (இலங்கை அகதி) ஆகிய நான்கு மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் நெடுந்தீவுக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து ஆரோக்கிய ஜேசு என்பவரது மீன்பிடிப் படகைச் சிறைபிடித்து, இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலுக்கு அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.

நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் அந்த மீன்பிடிப் படகின் பின்பகுதி இலங்கைக் கடற்படை ரோந்து கப்பலின் மீது மோதியதில் கப்பல் சேதம் அடைந்ததாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களைத் தாக்கியதுடன் மற்றொரு ரோந்து கப்பலைக் கொண்டு மீன்பிடிப் படகைத்தாக்கி மூழ்கடித்தனர் என்றும் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் இலங்கை கடற்படை தரப்பில்,  இலங்கை கடற்பரப்பிற்குள் கடந்த 18ம் தேதி இந்திய மீனவப் படகுகள் உட்பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அதன் போது அவர்கள் தமது கடற் படகைத் தாக்கி விட்டு தப்பிச் சென்ற வேளையில் அவர்கள் சென்ற படகு மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் இராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்த நிலையில், தங்கச்சிமடத்தில் மீனவ சங்கத்தினர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த கூட்டத்தில், இலங்கை கடற்படையினரை கண்டித்தும், உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியும் கடலோர மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.

மேலும் இலங்கையில் உள்ள மீனவர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவந்து பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழக மீனவர்கள் நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளதோடு, தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை அழைத்து, மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.