மாகாணசபைத் தேர்தலை பின்போடுவதற்குத் திட்டம்

புதிய அரசியல் யாப்பு திருத்தம் வரும்வரையில் மாகாணசபைத் தேர்தலை பின்போடுவதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக சிறீலங்கா அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் உள்ள அரசின் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பிலேயே சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா இந்த முடிவை எடுத்துள்ளார். தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்தை முதன்மைப்படுத்தி தேர்தலை பின்போடுவதே திட்டம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய உடன்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே மாகாணசபைகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது அதனை மீளாய்வு செய்து வருகின்றது சிறீலங்கா அரசு.

கொரோனா வைரசின் நெருக்கடிகளின் மத்தியில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்ற தேர்தலை நடத்திய சிறீலங்கா அரசு, தற்போது மாகாணசபை தேர்தலை பின்போடுவதற்கு கொரோனா வைரஸ் நெருக்கடியை காரணம் காட்டி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.