மாவீரர் வாரம் – “காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா” -றோய்

‘எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்’  என்கிறார் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
தமிழீழ மண் மீட்பு போரில் தங்களின் உயிர்களை ஈகம் செய்த  மாவீரர்களை தன்னகத்தே சுமந்து நிற்கும் இந்த கார்த்திகை மாதத்தில், அவர்கள் விட்டுச் சென்ற  கனவுகளைத் தாங்கி, உரிமைக்கான குரலை உலகறியச் செய்வோம்.

இந்நிலையில், மாவீரரைப் போற்றும் முகமாக  றோய் எழுதிய கவிதையை இங்கு பகிர்கின்றோம்.

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
****************
காவல் தெய்வங்களின்
கார்த்திகைத் திருவிழா
அகிலம் முழுவதும்
இன்று ஆரம்பம்
மதத்தைக் கடந்து
இனத்தைச் சேர்த்து
ஏழு நாட்கள்
நெஞ்சத்தில் இருத்தி
திருவிழாச் செய்வோம்

சங்கரை நினைத்து
விளக்கதை ஏற்ற
அடிமைகள் எமக்கு
உரிமை இல்லையாம்
அவர்களை நினைத்து
மரக்கன்று நடுவோம்
நாளைய தலைமுறை
நம்கதை சொல்லும்