தமிழக  மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்  

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொன்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதுடன் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலில் இருந்து வீசப்பட்ட கற்கள் பட்டதில்   மீனவர் இருவர் படு காயம் அடைதுள்ளதோடு படகுகளும் சேதம் அடைந்துள்ளது.

 இச்சம்பவம் மீனவர்களிடையே பெரும் பதட்டதை ஏற்படுத்தியுள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து  சுமார் 560 விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத் துறையின் அனுமதி பெற்றுக் கடலுக்கு சென்ற  மீனவர்கள்,  கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ஒன்பது கப்பல்களில் வந்த இலங்கைக் கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இரண்டு மீனவர்களுக்குச் சொந்தமான இரண்டு படகுகளைக் கற்கள் போன்ற பொருட்கள்  கொண்டு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் படகில் இருந்த இயேசு ராஜா மற்றும் தேவா என்ற இரண்டு மீனவர்களின் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து, இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்குப் பயந்து மீன்பிடி வலைகளைக் கடலிலேயே விட்டு விட்டு,  கரை திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் அச்சமின்றி மீன் பிடிப்பதற்கு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென  பாதிக்கப்பட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த மாதம் 26 திகதி,  இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் சுரேஷ் என்ற மீனவர் ஒருவருக்குத்  தலையில்  காயம் எற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 30 ஆண்டுகளாக, இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கைக் கடற்படைத் தாக்குதல் நடத்துவதும் கைது செய்வதும் படகுகளைப் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 150க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது. இதில் நல்லெண்ண அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்  இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 7 ஆம் திகதி, மீதமுள்ள 121 படகுகளையும் அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. இந்த  உத்தரவு தமிழக மீனவர்களிடையே பெரும் வாழ்வாதார பிரச்சனையை ஏற்படுத்தும் எனத் தெரிவித்து, குறித்த படகுகளை விடுவிக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பலரால் இந்திய அரசிற்கு வலியுறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.