அமெரிக்க தேர்தல்: டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் அதிகாரி நீக்கம்

அமெரிக்க தேர்தலில் தபால் வாக்குகள் பதிவில் மோசடி நடந்ததாக அதிபர் டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் அதிகாரி கிறிஸ் கிரெப்ஸ், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் 306 தேர்தல் சபை இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்.  வெற்றிக்குத் தேவையான 270 இடங்களை விட இது அதிகம்.

இருப்பினும் டிரம்ப், “நான் தேர்தலில் வெற்றி பெற்றேன்” என தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள டொனால்ட் டிரம்ப் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், தபால் வாக்குப்பதிவு தொடர்பாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துகளுக்கு மாறாக, தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகள் அனைத்தும் நம்பகத்தன்மை மிக்கவை என்று தேர்தல் அதிகாரியான கிறிஸ் கிரெப்ஸ் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தேர்தல் துறையின் அங்கமான சைபர் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு முகமையின் இயக்குநர் பொறுப்பில் இருந்து கிறிஸ் கிரெப்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

தான் பணியில் இருந்து நீக்கப்பட்ட தகவலை, டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் பக்கத்தை பார்த்தே கிறிஸ் கிரெப்ஸ் தெரிந்து கொண்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.