அரியநேத்திரனின் இல்லத்திற்கு நேற்றிரவு வந்த பொலிஸ்; வழங்கப்பட்டுள்ள தடை உத்தரவு

கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலினை நடத்த முயற்சித்தமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு கொக்கட்டிச்சோலை பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை கையளித்துள்ளனர்.

நேற்று இரவு (25) தனது வீட்டிற்கு வந்த பொலிஸார் இத்தடை உத்தரவை கையளித்ததுடன், இன்று சனிக்கிழமை காலை 07 மணிக்கு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு சமூகம் தருமாறு கோரி, அதற்கான கடிதத்தையும் கையளித்துள்ளதாக எமது தினக்குரல் இணையத்தள செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக தமிழர் தாயக பிரதேசங்களில் ஸ்ரீலங்கா பொலிஸார் தியாகி திலீபனின் நினைவேந்தல் விவகாரம் குறித்து நீதிமன்றங்களில் முறைப்பாடுகளை செய்து நீதிமன்ற தடை உத்தரவை பல தரப்பினருக்கும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.