விடுதலைப் புலிகள் மீதான இந்தியாவின் தடை அறமற்றது – கௌதமன்

விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் தடை நீட்டிப்பு என்பது நேர்மையற்ற அறமற்ற ஒரு செயலாகும்.  இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடை  இது என்று இந்தியா உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என திரைப்பட இயக்குனரும், தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவருமான திரு கௌதமன் இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

இலங்கையில் சமீபத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து அமெரிக்காவும் பிரான்சும் “விடுதலைப்புலிகள்  அந்த மண்ணில் இதுவரை ஒரே ஒரு சாமானிய மக்களை கூட கொன்றதில்லை அவர்கள் நடத்தியது அறப்போர் அந்த மண்ணின் விடுதலைக்கான போர்” என்று விடுதலைப் புலிகளை பெருமைப்படுத்தினார்கள்.

சிங்கள தலைவர்களும் சில புத்த துறவிகளும் கூட புலிகள்  எங்கள் மக்களை இதுபோன்று ஈவு இரக்கமற்ற முறையில் கொன்றதில்லை என்று விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நற்சான்று வழங்கினார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே சென்று ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கி அது வன்முறை இயக்கமல்ல தமிழீழ தமிழ்க்குடி மக்களின் விடுதலைக்கான இயக்கம் என்று பிரகடனப்படுத்தியது. அப்படி இருக்க தமிழ் நாட்டின் மீது பழியினைப் போட்டு இந்திய ஒன்றிய அரசு 2024 வரை புலிகளின் மீதான தடையை நீட்டித்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தமிழர்களை ஒடுக்குவதிலும் இல்லாமல் ஒழிப்பதிலும் ஆகப் பெரும் வித்தியாசம் இல்லை என்பதையே இந்நிலைபாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தமிழ் ஈழத் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் தாய்நாடு தமிழீழம் என்றும் தந்தையர் நாடு இந்தியா என்றும் பெருமை கொண்டு வாழ்ந்தவர்கள்.

2009ல் விடுதலைப் புலிகளின் அரசு இருந்தவரை தமிழ்நாட்டு மீனவ தமிழர்கள் ஒருவர் மீது கூட சிங்கள அதிகாரவர்க்கம் கை வைத்தது இல்லை. அதன் பிறகு எத்தனை எத்தனை  படுகொலைகள். விடுதலைப்புலிகள் அரசு இருந்தவரை இந்துமா கடல் பகுதியிலோ இலங்கைத்தீவிலோ அத்துமீறலோடு ஒரே ஒரு சீனர் கூட நடமாடியது இல்லை. ஆனால் இன்று கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள அதிகாரவர்க்கம் 99 ஆண்டுகள் ஒப்பந்தத்தோடு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு தாரை வார்த்திருக்கிறது. மிகச் சரியாகப் பார்த்தால் இந்தியா தடுத்திருக்க வேண்டும். புலிகள் இருந்திருந்தால் துரத்தி அடித்திருப்பார்கள். இந்துமா கடலுக்கும் இந்தியாவிற்கும் காலம் முழுக்க அரணாக நின்றவர்கள் விடுதலைப் புலிகள். சமீபத்தில்கூட கொழும்பில் உள்ள சீன தூதர் மன்னார் வழியாக ராமேஸ்வரம் நடு கடல் பகுதிக்கு வந்து ஆய்வு நடத்தி சென்றிருக்கிறார்.

2009-க்கு முன்பு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பு உண்டா என்பதை இப்போதாவது இந்தியா நினைத்துப் பார்க்க வேண்டும். சிங்களப் பகுதியில் மட்டுமல்ல தமிழீழப் பகுதியில் மட்டுமல்ல கச்சத்தீவிலும் சீனர்களின் அத்துமீறல், ஆக்கிரமிப்பு பெருகிக்கொண்டே வருகிறது.

இந்திய அரசு இதையெல்லாம் எப்பொழுது உணர போகிறது. இந்தியா- சீன யுத்தம் நடந்தபோது இலங்கை சீனா பக்கம்தான் நின்றது என்கிற வரலாறை மறந்து விடப் போகிறதா இந்தியா. சமீபத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு மைத்திரிபாலாவோ ரணில் விக்கிரமசிங்காவோ இந்தியாவிற்கு வந்து ஆலோசனை செய்யவில்லை.

மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு சென்றுதான் ஆலோசனை நடத்தி தங்களது நட்பை பலப்படுத்துகிறார். புலிகள் மீதான தடை நீட்டிப்பு மூலம் சீன அரசுக்கு இந்திய அரசு உதவி செய்திருக்கிறது என்பதுதான் யதார்த்தத்தின் பேருண்மை. இந்து மாக்கடலின் அதிகாரம் இந்தியாவிடம் இருக்கவேண்டுமானால் தமிழீழம் தமிழர்களிடமும் விடுதலைப் புலிகளிடமும் இருக்க வேண்டும். இல்லையேல் ஒருநாள் இந்துமாக்கடல் சீனாவிடம் இருக்கும். அப்போது இந்தியா யாருக்கு கீழ் இருக்கும் என்பது காலத்திற்கே வெளிச்சம்.

வ.கௌதமன்

தலைவர்

தமிழ்ப் பேரரசு கட்சி.