அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயில் கட்டுவதற்கு கற்கள் மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1,000ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்திருக்க வேண்டியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறக்கட்டளையினர் அறிவித்துள்ளனர்.
கடந்த 5ஆம் திகதி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் 175 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் சென்னை தொழில்நுட்பக்கழக தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மத்திய கட்டிட ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து செயற்பட்டு வருகின்றது. இதற்காக சென்னை தொழில்நுட்பக்கழக தொழில்நுட்பவியலாளர்கள் அயோத்தியிலுள்ள மண்ணின் தன்மை, வலிமை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேவேளை கோயில் கட்டுமானத்திற்காக 10ஆயிரம் செப்புக் கம்பிகள் தேவைப்படுவதாகவும், ராமர் கோயில் முழுவதும் கற்களால் மட்டுமே கட்டப்படவுள்ளதாகவும், இவ்வாறு கட்டப்படும் போது, காற்று, சூரியன், நீர் என எதன் மூலமும் சேதமாகாது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் நிலைத்திருக்கும் என்றும் அறக்கட்டளையினர் தெரிவிக்கின்றனர்.