சிறீலங்காவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கடுமையான பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் உறுப்பினர் பதவிக்காக கட்சிக்குள் இடம்பெற்ற உட்கட்சி மோதல்களில் யாழ் மத்தியகல்லூரி வளாகம் சமர்க்களம் போல காட்சியளித்தது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் கூட்டமைப்பு 3 உறுப்பினர் பதவிகளை தக்கவைத்திருந்த போதும் அதன் முக்கிய உறுப்பினர்கள் பலர் தமது பதவிகளை இழந்திருந்தனர்.
இந்த வரிசையில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் தோல்வியை தழுவியிருந்தார். எனினும் நேற்று (6) இரவு வாக்குகள் எண்ணும் மையத்திற்கு சுமந்திரன் சென்றதைத் தொடர்ந்து அங்கு அறிவிக்கப்பட்ட வாக்குகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், சுமந்திரன் ஆதரவாளர்களும், முன்னர் வெற்றிபெற்றதாக கூறப்பட்ட சசிகலாவின் ஆதரவாளர்களும் கடுமையான மோதல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குவாதங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சுமந்திரனின் பாதுகாப்புக்கு சென்ற சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
அதேசமயம், வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட சசிகலா கண்ணீருடன் வெளியேறும் காட்சி தாகயத்திலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ள மக்களை வேதனையும், கோபமும் அடைய வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.