பச்சிளங்குழந்தையின் உயிரை பறித்த கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த 4 மாத பச்சிளங்குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது.

இந்தியாவின் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்திலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியைப் பகுதியைச் சேர்ந்த இந்தக் குழந்தை கடந்த 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை உடல்நலக் குறைவாலும், சுவாசக் குறைவாலும் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது.

ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காததையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை மலப்புரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ரத்தப் பரிசோதனையில் அந்தக் குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினர்.

கடந்த இரு நாட்களாக அந்தப் பச்சிளங்குழந்தைக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அந்தக் குழந்தை உயிரிழந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பால்தான் அந்தப் பச்சிளங்குழந்தை இறந்தது. மேலும் அந்தக் குழந்தைக்கு இதய நோய் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் சண்டிகரில் 6 மாதக் குழந்தை உயிரிழந்த நிலையில் கேரளாவில் இன்று 4 மாத பச்சிளங்குழந்தை உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.