சீனர்களுக்காக இயங்கும் சிறீலங்கன் விமான சேவை வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு

வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கை மக்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வராத சிறீலங்கா விமான சேவை நிறுவனம், வெளிநாட்டில் சிக்கியிருக்கும் சீனர்களை தங்கள் விமான சேவை ஊடாக சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

வெளிநாட்டில் கல்வி பயின்று வரும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தொழில் நிமித்தம் வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை மக்கள் தங்கள் சொந்த நாடான இலங்கைக்கு திரும்பி வர விரும்பி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் எந்த தனிமைப்படுத்தலுக்கும் தயார் எனவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்களை அழைத்துவர எந்த ஏற்பாடுகளையும் செய்யாத காரணத்தினால் அவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆனால் சிறீலங்கன் விமான சேவை நிறுவனம் பிரிட்டன் தலைநகரான லண்டனில் சிக்கியிருக்கும் 218 சீனர்களை அங்கிருந்த இலங்கைக்கு அழைத்து வந்து பின்னர் மீண்டும் இலங்கையிலிருந்து சீனாவிற்கு அனுப்பி வைத்துள்ளதை நாம் எதற்காக பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.