மட்டக்களப்பில் பிள்ளையான் தோற்று விடுவார் என்கிறார் கருணா

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தோல்வி பெறுவது நிச்சயம் என விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளரை சந்தித்த போதே அவர் மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுத்தும் பிள்ளையான் நிராகரித்து விட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மதுபானசாலை உரிமையாளர்களையும், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களையுமே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இவர்கள் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள்?

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த மூன்று மாத காலமாக தமிழ் பேசும் மக்களை புறந்தள்ளியுள்ளது. அவர்களின் பிரச்சினைகளை நானே நேரில் சென்று தீர்த்து வருகின்றேன். இதனாலேயே நான் போட்டியிட நேர்ந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் இரண்டு ஆசனங்களைப் பெற்று வெற்றியடைவோம். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் புறந்தள்ளி விடுவார்கள் என்பதை நான் உறுதியாகக் குறிப்பிட விரும்புகின்றேன்.