1939 முதல் 1979 வரை 36 மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்க போராட்டங்களில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.தமது சமூகத்திற்காக உயிர்நீத்த இந்த தியாகிகளையிட்டு எந்த மலையக அரசியல்வாதிகளும் அக்கறை
கொள்வதில்லை. இவர்களின் வரலாறு எத்தனை மலையகத் தலைவர்களுக்குத் தெரியும். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகத் தலைவர்களை நாடாளுமன்ற, மாகாணசபை, நகரசபை, பிரதேச சபைகள் மீது ஆசை ஈர்த்துவிட்டது. அதனால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் நோக்கமாக உள்ளனரே தவிர தங்களை வளர்த்துவிட்ட மக்கள் மீது எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை. ஆயினும் மக்கள் இவர்களை தமது மனதில் இருத்தி நினைவுகூருகின்றனர். அந்தவகையில்,
மலையகத் தியாகிகள் தினம் இன்று (10) பெருந்தோட்டப்பகுதிகளில் நினைவு கொள்ளப் பட்டது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு மஸ்கெலியாவில் நகரில் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
மலையக உரிமை குரல் மற்றும் பிடித்தளராதே ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வில் போது, தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையகத் தியாகி சிவனு லெட்சுமனனின் தங்கை சுடர் ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன், நிகழ்வின் போது, அரசியல் ஆய்வாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். சரவணனால் எழுதப்பட்ட மலையக ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான ‘கள்ளத்தோணி’ நூல் வெளியிடப்பட்டது.
அத்தோடு, காளிதாசன் குழுவினரின் வீதி நாடகம், மலையக தியாகிகள் தொடர்பான விசேட உரை ஆகியனவும் இடம்பெற்றது.
அதன்பின்னர் மலையகத் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுக்கு உயிர்கொடுத்துவரும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
1939 முதல் 1979 வரை 36 மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற் சங்க போராட்டங்களில் ஈடுபட்டு உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவர்களின் வரலாறு எத்தனை மலையகத் தலைவர்களுக்குத் தெரியும். 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மலையகத் தலைவர்களை நாடாளுமன்ற, மாகாணசபை, நகரசபை, பிரதேச சபைகள் மீது ஆசை ஈர்த்துவிட்டது. அதனால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை அனுபவிக்கும் நோக்கமாக உள்ளனரே தவிர தங்களை வளர்த்துவிட்ட மக்கள் மீது எவ்வித அக்கறையும் செலுத்துவதில்லை.
மலையகத் தியாகிகள்
- கோவிந்தன் முல்லோயா தோட்டம், ஹேவாஹெட்ட, 1939,
- வேலாயுதம் கந்தளா தோட்டம், புப்புரஸ்ஸ, 1942
- வேலுசாமி கந்தனா தோட்டம், புப்புரஸ்ஸ, 19
- வெள்ளையன் மீரியாக்கொட தோட்டம், சாமிமலை. 1950,
- எட்லின் நோனா, என்கலவல தோட்டம், தெபுவான. 1953,
- ஆதியப்பன், மல்கொல தோட்டம், நாவலப்பிட்டிய. 1953,
- வேதன் லின்டல் தோட்டம், நேபொட. 1957,
- வைத்திலிங்கம், டெவன் பனிய பத்தனை, தலவாக்கலை. 1957,
- நடேசன் வெறேயர் தோட்டம், இரத்தினபுரி. 1957,
- ஏப்ரஹாம் சிங்கோ, ரவுன்பங்களாத் தோட்டம், அக்கரப்பத்தனை. 1958,
- ஐயாவு, பொகவந்தலாவ தோட்டம், பொகவந்தலாவை. 1958,
- பிரான்சிஸ் பொகவந்தலாவை தோட்டம், பொகவந்தலாவை. 1958,
- கொம்பாண்டி, சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958,
- பொன்னையா சென் மாக்ரட் தோட்டம், உடபுசல்லாவ. 1958,
- கருமலை, நல்லதண்ணீர் தோட்டம், மஸ்கெலியா. 1959,
- முத்துசாமி, காலகார, மாதென்ன தோட்டம், எல்கடுவ. 1959,
- ஜேம்ஸ் சில்வா, கமாவளை தோட்டம், பசறை. 1959,
- தங்கவேல், முகலாசேனை தோட்டம், இறக்குவானை. 1959,
- சிதம்பரம், மல்வான தோட்டம், நிட்டம்புவ. 1960,
- முனியாண்டி, வெத்திலையூர் தோட்டம், எட்டியாந்தோட்ட. 1960,
- செல்லையா, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
- ஆராயி, லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
- மாரியப்பன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
- நடேசன், லெட்சுமித் தோட்டம், நாவலப்பிட்டி. 1961,
- விஜயசேன, எல்வதுரை தோட்டம், இங்கிரியா 1961,
- சோலை, சின்ன கிலாபோக்கு தோட்டம், மடுல்கல. 1961,
- அழகன், கந்தநுவர தோட்டம், எல்கடுவ. 1969,
- ரெங்கசாமி கந்தநுரவ தோட்டம், எல்கடுவ. 1969,
- இராமையா, சீனாக்கள தோட்டம், பதுளை. 1970,
- அழகர் சாமி சீனாக்கல தோட்டம், பதுளை. 1970,
- கந்தையா நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
- பார்வதி நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
- ஆறுமுகன் நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
- இராமசாமி, நாலந்த தோட்டம், மாத்தளை. 1970,
- லெட்சுமணன் சிவனு யொக்ஸ்போர்ட் தோட்டம் வட்டகொட. 11.05.1977.
- பழனிவேல், பல்லேகலத் தோட்டம், கண்டி. 1979.