பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கு! யாழில் திரண்ட போராட்டகாரர்

தமிழ் அரசியல் கைதி சிறையில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று நண்பகல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக தடுத்துவைக்கப்படிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த மாத இறுதியில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தாவர் 19 வயதில் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 27 ஆண்டுகள் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். மட்டக்களப்பைச் சேர்ந்த செ.மகேந்திரன் வயது- 46 என்ற அரசியல் கைதியே உயிரிழந்தார்.

கடுமையான சுகயீனத்துக்குள்ளான அவருக்கு சிகிச்சைகள் சீராக வழங்கப்படாமை காரணமாக உயிரிழந்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

அவரது உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்தும் சிறைகளில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.