அனுமதிப் பத்திரம் காலவதியான துப்பாக்கி இருந்தது; ரஞ்சன் கைதுக்கு காரணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றிரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைந்த மாதிவெலயிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் நேற்று மாலை சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவரது கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

நேற்றுச் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சோதனையிட்டிருந்தனர். இதன்போது, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் ஆணையின் அடிப்படையில் இந்த திடீர்ச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேடுதலின்போது அவரது வீட்டில் இருந்து அனுமதிப் பத்திரம் காலவதியான கைத்துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் சில சட்டவிரோத பொருள்கள் கைப்பற்றப்பட்டமையைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தத் தேடுதல் நடைபெற்றவேளை சமூக வலைத் தளம் மூலமாகக் காணொளி நேரலையில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, பொலிஸார் இப்போது ஒரு தேடுதல் ஆணையுடன் எனது வீட்டை சோதனை செய்தார்கள், அந்த ஆணையில் தேடுதலுக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை, ஆனால் நான் கைது செய்யப்பட்டால் நான் மருத்துவமனைக்கு அல்ல, சிறைக்குச் செல்வேன். நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். உண்மையைப் பேசுவதற்கான எந்தவொரு எதிர்விளைவையும் எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கைது செய்வதை ஒட்டித் தமக்கு கைவிலங்கிட வந்த பொலிஸ் அதிகாரியை அதற்கு முன்னர்ஆரத் தழுவி நட்புப் பாராட்டினார் ரஞ்சன் ராமநாயக்க.