சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு குறித்து அறிக்கை கோரல்…

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் தொடர்பில் இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கிழக்கு மாகாண காணிகளை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு பணிப்புரை விடுத்துள்ளது.

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது தடவையாகவும் கூடியது.

சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், கடற்கரையைப் பாதுகாத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டது.

குழு, இதுவரை மேற்கொண்ட களப் பரிசோதனைகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கடற்கரைகளில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள், அரச காணிகளை ஆக்கிரமித்தல், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்தல் ஆகியவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல்கள் கோரப்பட்டதுடன், அது குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அறுகம்பே கடற்கரையில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்தும் இடைக்கால அறிக்கையைப் பெறுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், குறித்த அறிக்கைகளைத் தயாரிக்கும் போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடமிருந்தும் தகவல்களைப் பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.