ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழு பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (16) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுப்பிக்கத்தக்க சக்திவளம், கல்வி, தொழிற்பயிற்சி, சமூக அபிவிருத்தி, அத்துடன் பிராந்திய ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் இராஜதந்திர உறவுகளின் வளர்ச்சியைப் பிரதமர் பாராட்டியதுடன், பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு ஜேர்மன் வர்த்தக சமூகத்தினருக்கும் இதன்போது அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் சக்தி மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான இலக்குகள் தொடர்பில் கலந்துரையாடிய பிரதிநிதிகள் குழு, சக்தி சேமிப்பு முறைமைகள், மின்சக்தி முறைமைகளை நவீனமயமாக்குதல், காற்றாலை சக்தி மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மின்சார மயமாக்குதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் விளக்கமளித்த பிரதமர், குறிப்பாக தொழிற்கல்வியை வலுப்படுத்துதல் மற்றும் கனிஷ்ட இரண்டாம் நிலைக் கல்வி மட்டத்திலிருந்தே தொழிற்பயிற்சி வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார். இதன்போது, ஜேர்மனியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும் இரட்டைப் பாதை தொழிற்கல்வி முறை (Dual-track vocational education system) இலங்கைக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாலினம், சமூக உள்ளீர்ப்பு, அத்துடன் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னேற்றுவதற்கான இலங்கையின் அணுகுமுறைகள் தொடர்பிலும் இருதரப்பினருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.