சுகாதார அமைச்சு – ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் இடையே ஒப்பந்தம்!

அத்தியாவசிய மருந்துகளை தடையின்றி மற்றும் திறம்பட நாட்டு மக்களுக்கு வழங்குவதை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன்  சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நேற்று புதன்கிழமை (02) சிறப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

தேசிய கொள்முதல் நடைமுறைகள் ஊடாகப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலவும் அத்தியாவசிய மருந்துகளை, சர்வதேச கொள்முதல் பொறிமுறைகளின் வழியே இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கு இந்த கூட்டாண்மை வழிவகுக்கும்.

குறைந்தளவிலான சந்தை அணுகல், உலகளாவிய விநியோகஸ்தர்களின் பற்றாக்குறை மற்றும் குறைந்த அளவிலான கொள்முதல் காரணமாக பெற முடியாத மருந்துகளுக்கு இத்திட்டம் மிக முக்கியமானதாகும்.

நிதியமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அணில் ஜாசிங்க, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான  வதிவிட பிரதிநிதி அசுசா குபோட்டா மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இத்திட்டத்தின் மூலம் மருந்து கொள்முதல் மற்றும் விநியோகச் சங்கிலி கட்டுப்பாடு வலுப்பெறுவதுடன், இலங்கையின் சுகாதார சேவை விநியோக அமைப்பின் செயல்திறனும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், உலக சுகாதார  ஸ்தாபனத்தினால்  பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை போட்டித் தன்மையுள்ள விலையில் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.  இவ்வாறு பெறப்படும் மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின்   பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

இலங்கையில் விநியோகிப்பதற்கு முன்னர் அனைத்து ஒழுங்குமுறை மற்றும் தரநிலைகள் பூர்த்தி செய்யப்படுவது உறுதிசெய்யப்படும் என  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.