அரசுக்கு எதிராக செய்தி அறிக்கையிட்ட யாழ். ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரிய அரச ஊடகம்!

04. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி யாழ். ஊடகவியலாளர் ஒருவரிடம் அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர் பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இவ்வாறு விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விஜயம் செய்தபோது நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்தை செய்தி அறிக்கையிட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் ஒருவரது தாயின் அவலங்களை அமைச்சருக்கு வெளிப்படுத்தியமை, ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ். மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த போது போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டியே விளக்கம் கோரப்பட்டுள்ளது.

“இது தொடர்பில் எழுத்து மூலம் கோரப்பட்டால் ஊடக நிறுவனத்திற்கு விளக்கமளிக்க முடியும்” என குறித்த ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு செய்ய முடியாது என்றும் இனி செய்தி அனுப்ப தேவையில்லை என்றும் ஊடக அடையாள அட்டையை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் குறித்த ஊடக நிறுவனத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சுயாதீனமாக செயற்படும் நிலையில் ஏனைய ஊடகங்களுக்கு செய்தி அறிக்கையிட்டது தொடர்பாகவும், செம்மணி மனித புதைகுழி அகழ்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பிலும், குறித்த ஊடகவியலாளரின் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.