நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டெர்வெயிட் (Margaret Satterthwaite) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் தற்போது சேவையில் உள்ள நீதிபதிகளின் ஓய்வு வயதும் நீட்டிக்கப்படுவதாக விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, இது நிறைவேற்றுத்துறையின் தலையீடு இன்றி இடம்பெறுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்களில் அதிகளவான வழக்குகள் தேங்கிக் கிடப்பதைக் குறைப்பதும் தாமதங்களைக் குறைப்பதும் இத்திருத்தங்களின் பிரதான நோக்கமாகும் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



