இலங்கை குறிப்பிடத்தக்க அளவிலான வெளிநாட்டுக் கடன் கடப்பாடுகளை நிறைவேற்றத் தயாராகி வரும் நிலையில், அந்நியச் செலாவணி மூலங்களைப் பன்முகப்படுத்தவும், அதிக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று (20) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தனது பொருளாதார இலக்குகளை அடைவதற்குமான அரசாங்கத்தின் வியூகம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதி அமைச்சர், முதலீடுகள், ஏற்றுமதிகள், வௌிநாட்டு பணவணுப்பல்கள் மற்றும் பிற மூலங்களின் ஊடாக தேறிய அந்நியச் செலாவணி வருகையை அதிகரிப்பதில் அரசாங்கம் மேலும் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
இலங்கையின் எதிர்கால வெளிநாட்டு கடன் மீள் செலுத்துகை குறித்து கவலை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, 2028 ஏப்ரல் மாதத்தில் நாடு சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.
ஆடை உற்பத்தி போன்ற தொழில்துறைகள் முக்கியமானதாக இருந்தாலும், சில துறைகளில் பெறுமதிச் சேர்க்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, பாரம்பரிய அந்நியச் செலாவணி ஈட்டும் துறைகளுக்கு அப்பால் ஏனைய துறைகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
எனவே, அதிக வருவாயை உருவாக்கக் கூடிய புதிய துறைகளை அடையாளம் காணும் அதே வேளையில், முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு வருவாயைப் பன்முகப்படுத்துவதற்கான வியூகமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.
2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
இது தொடரும் என எதிர்பார்ப்பதோடு, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 9 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி கையிருப்பை உருவாக்கும் இலக்கை அரசாங்கத்தால் அடைய முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சர்வதேச தொழில் சந்தையின் முன்னேற்றங்கள் குறித்து அரசாங்கம் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனம் செலுத்தும் எனவும், இலங்கையின் சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் பிரதி அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.



