இலங்கை வரலாற்றின் பாரிய மனிதப் பேரவலம் ‘செம்மணி’ மனிதப் புதைகுழி : உடனடி விசாரணைக்கு வலியுறுத்தல்

செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டெடுக்கப்பட்டு வருவதன் மூலம் நாட்டின் வரலாற்றில் பாரிய மனிதப் பேரவலமொன்று வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருப்பதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவான் போபகே தெரிவித்தார்.

மக்கள் போராட்ட இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று (19) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 572க்கும் மேற்பட்ட உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. பால்கன் மோதலின் போது போஸ்னியா ஹெர்ஸகோவினாவிலும், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நியூரம்பர்க்கிலும் கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கைக்கு நிகராக இது காணப்படுகிறது.

இலங்கையின் செம்மணி அகழ்வுப் பணி செல்லும் வேகத்தைப் பார்த்தால், இது உலக சாதனையை நெருங்குமோ என்ற அச்சம் எழுகிறது.

இலங்கையில் மாத்தளை, மிருசுவில், யாழ்ப்பாணம், கொழும்பு துறைமுகப் பகுதி, சூரியகந்த, மினுவாங்கொடை, மன்னார் என இதுவரை 32 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

1999 இல் கராஜில் பணிபுரிந்த இரு இளைஞர்களின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டதில் தொடங்கி, இன்று சிறுவர்கள், கைக்குழந்தைகள், பாடசாலைப் பைகளுடன் உள்ள மாணவர்கள் மற்றும் தாய்மார்கள் தமது குழந்தைகளைக் கட்டியணைத்த நிலையில் உள்ள எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

அதேவேளை, 80களின் பிற்பகுதியில் ஜே.வி.பி. உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய மாத்தளை மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

அக்காலத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷ போன்றோர் அப்பகுதியின் இராணுவப் பொறுப்பதிகாரிகளாக இருந்த நிலையில், 2013இல் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டு மறக்கடிக்கப்பட்டன.

பந்துல இடம்போகம அளித்த சாட்சியங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதோடு, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. மன்னார் மற்றும் கொழும்பு துறைமுகப் பகுதி புதைகுழிகளின் நிலைமையும் இதுவே ஆகும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத் தரவுகளின்படி 20,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பான்மையானவை வடக்கு மற்றும் கிழக்கு மக்களைச் சார்ந்தவை.

இந்நிலையிலேயே பாதிக்கப்பட்ட உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்புப் படையினரின் நிபுணத்துவமின்மை, தடயவியல் தொழில்நுட்பக் குறைபாடு, கார்பன் காலக்கணிப்பு வசதிகள் இல்லாமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அதிகாரிகளின் பற்றாக்குறை ஆகியவற்றுடன், அரசியல் விருப்பமின்மையே இந்தத் தாமதங்களுக்கு முக்கியக் காரணமாகும்.

தமது தேர்தல் அறிக்கையின் 23 ஆம் பக்கத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி வழங்குவதாகக் கூறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகவுள்ள நிலையிலும் இதற்கு முன்னுரிமை அளிக்கத் தவறிவிட்டது.

எனவே, செம்மணி, மாத்தளை, மன்னார், கொழும்பு துறைமுகப் பகுதி உட்பட கண்டறியப்பட்ட 32 மனிதப் புதைகுழிகளிலும் உடனடியாக அகழ்வுப்பணிகளை முடித்து, மரபணு அறிக்கைகள், பிரேதப் பரிசோதனைகள் மற்றும் கார்பன் காலக்கணிப்பு ஆய்வுகளை விரைவுபடுத்த வேண்டும்.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் என்பவற்றை உள்ளடக்கிய சிறப்புப் பிரிவுகளை அமைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கி உடற்பாகங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவான் போபகே வலியுறுத்தியுள்ளார்.