இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை மீட்குமாறு வடக்கிலிருந்து கோரிக்கை

இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

38 தமிழக கடற்றொழிலாளர்கள் வெலிக்கடை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இலங்கை சிறைகளில் உள்ளனர்.

இதில் 16 விசாரணை கைதிகளும், 21 தண்டனை கைதிகளும் அடங்குவர்.

இலங்கையின் பல்வேறு சிறைச்சாலையில் நடந்த கலவரங்களில் 40 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் சிறைச்சாலையில் இருந்த உன்னிகிருஷ்ணன் என்ற இந்திய கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் பல்வேறு சிறைச்சாலையில் இருந்த 600 க்கு மேற்பட்ட சிங்கள கைதிகள், யாழ் சிறைச்சாலை உள்ளிட்ட வடக்கு கிழக்கு மாகாண சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

மேலும் இலங்கை சிறைச்சாலைகளில் வெளியில் இருந்து சதிசெய்து, திட்டமிட்டு கலவரம் நடத்தப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது.

இதனால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு உள்ளது.

இதனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் தலையிட்டு உடனடியாக தமிழக கடற்றொழிலாளர்களை மீட்டு அவர்கள் குடும்பங்களிடம் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.