உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்களின் முழுமையான ஆதரவை வழங்குவதோடு, இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் கண்டறிந்து நாட்டின் சட்டத்துக்கமைய நீதியைப் பெற்றுக்கொடுக்கத் தொடர்ந்து எதிர்பார்ப்பதாக கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி கோட்பாடுகளின்படி, மரண தண்டனையானது மனித கண்ணியத்தை மீறுவதாக அமைவதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சபையின் இந்தப் போதனையின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்படுவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இலங்கையின் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது தமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதாகவும், நீதித்துறை எடுக்கும் தீர்மானங்கள் அல்லது விசாரணைகளில் எந்தவொரு வகையிலும் தலையிட விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை பழிவாங்கலை விரும்புவதில்லை. “நபர்கள் எப்போதும் கசப்பான உணர்வுகளையும் தனிப்பட்ட பழிவாங்கல்களையும் கடந்து, மனப்பூர்வமாக மன்னிக்க அழைக்கப்படுகிறார்கள்; இருப்பினும், சிவில் சமூகமும் சட்ட அமைப்புகளும் நிறுவப்பட்ட நீதித்துறை மூலமாகப் பொது அமைதி, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்”
அத்துடன், இவ்வாறான தீவிரவாதத் தாக்குதல்கள் வழிபாட்டுத் தலங்களிலோ அல்லது நாட்டின் வேறு எந்தவொரு பகுதியிலோ மீண்டும் இடம்பெறாத வகையில் தடுப்பதற்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.



