சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளுக்குத் தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மைக் காலத்தில் நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அரசாங்கமும் பொறுப்பான அமைச்சர்களும் முன்வைக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.
சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவது, கைபேசிகள் பயன்படுத்தப்படுவது மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதே இத்தகைய அசம்பாவிதங்களுக்கு காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இக்கூற்றானது, தங்களது கடமையையும் பொறுப்பையும் அரசாங்கம் சரியாக நிறைவேற்றவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. சிறைச்சாலைச் சுவர்களில் ‘சிறைக்கைதிகளும் மனிதர்களே’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தாலும், சுவர்களுக்குள் மனித உரிமை மீறல்களுமே இடம்பெறுகின்றன.
பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினரின் தகவல்களைச் சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள் கூட அச்சுறுத்தப்படுகின்றனர். அரசாங்கத்தின் கூற்றை மட்டும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகவும் குரலற்றவர்களின் குரலாகவும் செயற்படும் அமைப்புகளை அடக்குமுறை மூலம் முடக்க நினைப்பது ஜனநாயகத்துக்குப் பேரபாயமாகும்.
குறிப்பாக, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் பிரதானிகளான சிரேஷ்ட சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் சுதேஷ் நந்திமால் ஆகியோருக்கு அண்மையில் கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு குழுவின் பெயரைப் பயன்படுத்தி, இந்த விவகாரங்களில் தலையிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடமும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கம் உடனடியாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கலாச்சாரத்தை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் கீழ், மீண்டும் இத்தகைய மிரட்டல்கள் தொடர்வது கவலையளிக்கிறது. சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முறையிட்டமை அவர்களின் உரிமையாகும். தற்போதைய எதிர்க்கட்சிகள் கூட ஜெனீவா செல்வதாகக் கூறும் போது, சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் சர்வதேச ரீதியில் குரல் கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.
இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு ஒருபோதும் அச்சப்படாது. இந்த அமைப்பு தனித்து செயற்படவில்லை; அவர்களது அனைத்து நியாயமான போராட்டங்களுக்கும், அவர்கள் எடுக்கும் எந்தவொரு சட்டரீதியான நடவடிக்கைகளுக்கும் நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம். அரசாங்கம் இத்தகைய அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தி, அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.



