வட மக்களின் காணி போராட்டத்தின் நியாயத்தை தெற்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் – சம உரிமை இயக்கம்!

வட பகுதி மக்களின் காணி போராட்டம் எத்துணை நியாயமானது என்பதை தெற்கு மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என சம உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

சம உரிமை இயக்கத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வியக்கத்தின் அமைப்பாளரும் முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான இந்திரானந்த டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் பலாலி, மயிலிட்டி மற்றும் முல்லைத்தீவின் கேப்பாப்புலவு உள்ளிட்ட பல பகுதிகளில் 36 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் பூர்வீக நிலங்கள் இதுவரை மீள ஒப்படைக்கப்படவில்லை. இதனால் கேப்பாப்புலவில் தொடர் சத்தியாகிரகப் போராட்டமும், பலாலியில் ஆர்ப்பாட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவை, வட பகுதி மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கியுள்ளனர்.

1950 ஆம் ஆண்டளவில் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ உறுதிப்பத்திரங்கள் நில உரிமையாளர்களிடம் உள்ளன. 1980 ஆம் ஆண்டு முதல் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் 330 ஏக்கர் நிலங்கள் முதற்கட்டமாக பெறப்பட்ட நிலையில், பின்னர் 1990 ஆம் ஆண்டு இரண்டாம் ஈழப்போரின் போது மேலும் பெருமளவு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் நிலங்களை விடுவிக்க அரசாங்கத்திடம் முறையான திட்டமில்லை. ஒரு வருடத்துக்கு முன்னர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்ட அளவிலான காணிகளை விடுவிக்குமாறு உத்தரவிட்டும் இதுவரை எதுவுமே விடுவிக்கப்படவில்லை.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் வட மாகாண ஆளுநருடன் தொடர்பு கொண்டபோது, மீண்டும் இராணுவத்தினரின் ஆலோசனையையே நாடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாம்களுக்கு கோடி கணக்கில் பணம் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறி பாதுகாப்புப் தரப்பினர் காணிகளை விடுவிக்க மறுக்கின்றனர்.

மேலும், யுத்தம் முடிந்த பின்னர், குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் 11 கோவில்கள் வரை தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 350 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலத்தில் இராணுவ உயர் அதிகாரியின் பங்களா மட்டுமே இயங்கி வருகின்றதுடன், இராணுவப் பகுதிக்குள் அமைந்துள்ள கோவில்கள் மற்றும் தேவாலயங்களுக்குச் செல்ல இன்னமும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இதேவேளை, இராணுவத்தினரும் சிவில் பாதுகாப்புப் படையினரும் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி இலவச ஆட்கூலியுடன் உற்பத்தி செய்யும் பொருட்களை, சந்தையில் குறைந்த விலைக்கு பல்பொருள் அங்காடி வலையமைப்புகளுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் அப்பகுதி சாதாரண விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் வழங்கிய போதிலும், அவர்களின் நம்பிக்கையை அரசு வீணடித்து வருகின்றது. எனவே, தெற்கிற்குப் பரப்பப்படும் தவறான இராணுவக் கண்ணோட்டங்களைத் தாண்டி, வட பகுதி மக்களின் நியாயமான போராட்டத்துக்கு தெற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இணைந்து சம உரிமை இயக்கம் வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.