கொழும்பு துறைமுக நகரில் கடத்திக் கொல்லப்பட்ட சீன நாட்டவர் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள்

கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டவர் குறித்த புதிய விபரங்கள் வெளிவந்துள்ளன.

பெரும் தொகைப் பணம் மற்றும் சர்வதேச குற்றத் தொடர்புகள் அவருக்கு இருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டதுடன் புலனாய்வாளர்கள் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், கொலை செய்யப்பட்ட சீன நாட்டவர், ஏப்ரல் 7 ஆம் திகதி ஒரு குழுவினருடன் கம்போடியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதன்போது, அவர் சுரினாம் (suriname) குடியரசினால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்திருப்பதாக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.

அத்தோடு, இறந்தவருடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக பெரும் தொகை பணம் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, குறித்த பணம் தொடர்பான ஒரு தகராறுடன் இந்தக் கொலை தொடர்புடையதாக கருதப்படுகிறது.

ஹாவோ சோங் என அடையாளம் காணப்பட்ட குறித்த சீன நாட்டவர், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழிக் குற்றச் செயல்பாட்டின் முக்கிய உறுப்பினராக இருந்தார் என்பதை இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கொல்லப்பட்டவரின் சாரதி, சமையல்காரர் மற்றும் காதலி ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் எடுக்கப்பட்டு, தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

இதன்படி, குறித்த விடயங்களை விசாரிப்பதற்காக ஐந்து பிரத்யேக புலனாய்வுக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.