இலங்கை பாராளுமன்றத்தின் 24 அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று, இந்தியாவின் Parliamentary Research and Training Institute for Democracies (PRIDE) நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட திறன் மேம்பாட்டு மற்றும் அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஜூலை 13 முதல் 17 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.
பயிற்சித் திட்டம் PRIDE நிறுவனத்தின் வரவேற்பு மற்றும் அறிமுக அமர்வுடன் ஆரம்பமானது. இதன்போது இந்திய பாராளுமன்ற செயலகத்தின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், உறுப்பினர்களுக்கான நலன்புரிச் சேவைகள், உறுப்பினர் சேவைப் பிரிவு, உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரிவுகள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்கும் முக்கிய பிரிவுகளின் பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள், அவை நடைமுறைகள், மரியாதை மற்றும் நெறிமுறைகள், இராஜதந்திர வழிகாட்டுதல்கள், நிதிக்குழுக்கள், கூட்டுக் குழுக்கள், தெரிவுக்குழுக்கள் மற்றும் துறை சார்ந்த நிரந்தரக் குழுக்கள் (Departmentally Related Standing Committees – DRSCs) உள்ளிட்ட குழு முறைமைகள் தொடர்பாகவும் விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன.



