ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஓர் இந்திய மாலுமி உயிரிழந்தார். 10 இந்திய மாலுமிகள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக ஈரான் தூதரக அதிகாரிகளை நேரில் வரவழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் திகதி அமெரிக்கா, ஈரான் இடையே போர் மூண்டது. பல்வேறு நாடுகளின் சமரசத்தால் கடந்த ஏப்ரல் 8-ம் திகதி இரு நாடுகள் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 17-ம் திகதி இரு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்பிறகு தங்கள் எல்லையை ஒட்டிய ஹார்முஸ் ஜலசந்தி பகுதி வழியாகவே எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல வேண்டும் என்று ஈரான் இராணுவம் கட்டுப்பாடு விதித்தது. இதை மீறி ஓமன் கடல் பகுதி வழியாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் இராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாக அமைதி ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 8-ம் திகதி அறிவித்தார். தற்போது அமெரிக்கா, ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சொந்தமான எம்டி அல் பஹியா, எம்டி மொம்பாசா ஆகிய இரு எண்ணெய் கப்பல்கள் நேற்று ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல முயன்றன. இரு கப்பல்களிலும் மாலுமிகள் உட்பட மொத்தம் 46 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 30 பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்த எண்ணெய் கப்பல்களை குறிவைத்து ஈரான் இராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் இரு கப்பல்களும் கடுமையாக சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஓர் இந்திய மாலுமி உயிரிழந்தார். 10 இந்திய மாலுமிகள் படுகாயம் அடைந்தனர்.



