நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: அவசர விசாரணைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்

கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட இரண்டு கைதிகளின் மரணங்கள் குறித்து அவசர மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

வியாழக்கிழமை (9) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்கான பிரதி பிராந்திய பணிப்பாளர் பாபு ராம் பந்த், இந்த மரணங்கள் குறித்த தகவல்களும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகள் சித்திரவதை மற்றும் ஏனைய மோசமான நடத்தைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் ஆழ்ந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

‘இந்தக் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து மரணங்கள் குறித்தும் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கைதிகளைச் சந்திக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், சட்டத்தரணிகள் தங்களது சேவை பெறுநர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும், குடும்ப உறுப்பினர்களுக்குப் பார்வையிட அனுமதி வழங்கப்பட வேண்டும் மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் கைதிகளுக்குத் தாமதமின்றி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.