சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
“வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதிகளிலும், தமிழர் என்கிற அடையாளத்தோடு இலங்கைத் தீவின் அனைத்து பாகங்களிலும் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் அரச படைகளாலும், துணை ஆயுதக்குழுக்களாலும் கடத்தப்பட்டுள்ளனர்”.
“கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமலாக்கப்படுள்ளனர். இந்தத் துயர் தோய்ந்த வரலாறு 1948 ஆம் ஆண்டிலிருந்தே ஆரம்பிக்கிறது” என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
“வகைதொகையற்ற கணக்கில் தமிழ் இளையவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்றோ, அதற்கான பொறுப்புக்கூறலையோ வெளிப்படுத்தாத இலங்கை அரசு, இந்த விடயத்தில் பல தசாப்தங்களாக மௌனம் சாதித்து வருகிறது” என்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
“விசாரணை என்கிற பெயரில் திருடனே குற்றவாளியை தேடும் படலத்தை அரசு அரங்கேற்றி வருகின்றது”.
“நீதி கோரும் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டங்கள் குறித்த பலத்த எதிர்ப்பையும், அதிருப்தியையும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் வெளிப்படுத்தியே வந்திருக்கின்றோம்”.
“இப்போது ஆட்சிபீடத்திலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஏனைய அரசுகளைவிட மிகத் தந்திரோபாயமாக எமது விடயத்தை கையாள்வதை அவதானிக்கிறோம்” என்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
“தெற்கில் தமது சிங்கள இளைஞர்களும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கில் தமிழ் இளையோரும் காணாமலாக்கப்பட்டுள்ளனர்”.
“எனவே தெற்கோடு கைகோர்த்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்கின்ற அடிப்படையில் முன்வைக்கப்படும் அறமற்ற இந்த வாதம், எமது கண்ணீரை விலை பேசுகிறது”.
“எமது பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு நாம் நட்ட ஈட்டையோ அல்லது அரச வேலை வாய்ப்புக்களையோ பெற்றுக்கொண்டு மரணச் சான்றிதழில் கையெழுத்திட தயாரில்லை” என்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.



