தெளிவற்ற கல்விச் சீர்திருத்தங்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி – ஜோசப் ஸ்டாலின் கேள்வி

இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கல்வி முறையில் நிலவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு முறையான தீர்வினைத் தரக்கூடிய தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு சீர்திருத்தமே மாணவர்களின் எதிர்கால நலனுக்கு அவசியமான நிலையில், தற்போதைய திட்டங்களின் தெளிவற்ற தன்மையே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த தெளிவற்ற தன்மையே தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டிலும் பாடத்திட்டங்கள் மாற்றமடையும் எனக் கூறப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. மாறாக, தற்போது கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் மாத்திரம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்விச் சீர்திருத்தத்திற்காக 5 பிரத்தியேகக் குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனைகள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்ற நிலையிலும், வருடங்கள் கடந்தும் கல்வி முறையில் உண்மையாகவே மாற வேண்டிய பாடத்திட்டங்கள் இன்னும் மாற்றப்படவே இல்லை.

அதேநேரம், ஜனாதிபதி செயலாளரின் கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட உத்தியோகப்பூர்வ ஊடக அறிக்கையில், நாட்டில் உள்ள 6500 பாடசாலைகளில் தேவையான வசதிகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள தகவல் உண்மைக்குப் புறம்பானது. நாட்டில் உள்ள 10,100 மொத்தப் பாடசாலைகளில், குறைந்தபட்சம் 500 பாடசாலைகளிலாவது இந்த வசதிகள் உண்மையாகவே முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி எல்லோரின் மத்தியிலும் எழுகிறது. மேலும், 373 பாடசாலைகளை இந்தச் சீர்திருத்தங்களுக்காக அபிவிருத்தி செய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், வெறும் வாய்மொழி அறிக்கைகள் மூலமாக மட்டும் கல்விச் சீர்திருத்தங்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஒருபோதும் பூர்த்தி செய்துவிட முடியாது.
தற்போதைய பாடசாலைக் கல்வி முறையில் நிலவும் உண்மையான நெருக்கடிகளுக்குத் தகுந்த தீர்வுகளை வழங்குவதே ஒரு கல்விச் சீர்திருத்தத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். எனினும், தற்போதைய சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் அத்தகைய தீர்வுகள் எவையும் கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது. கடந்த காலங்களில் செயல்படுத்த முயன்ற திட்டங்களும் எவ்வித திட்டமிடலும் இன்றியே ஆரம்பிக்கப்பட்டதால் தோல்வியடைந்தன. எனவே, கல்வி முறையில் நிலவும் தற்போதைய நெருக்கடிகளுக்கு முறையான தீர்வினைத் தரக்கூடியதும், தொலைநோக்குப் பார்வை கொண்டதுமான ஒரு கல்விச் சீர்திருத்தமே மாணவர்களின் எதிர்கால நலனுக்கு அவசியமாகும். அதனை அவசரமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.