உள்நாட்டு தொழில்துறையினரை வலுவூட்டி, அவர்களை ஏற்றுமதி சந்தைக்கு பிரவேசிக்கச் செய்வதன் மூலம் டொலர் வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், முதலீடு செய்வதற்கும் சந்தையை வெல்வதற்கும் தயாராக இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இறப்பர் மற்றும் தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையின் முன்னணி வர்த்தகர்களுடன் நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
உலகில் பல்வேறு நாடுகள் உள்நாட்டுத் தொழில்களை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பதன் மூலமே பொருளாதார ரீதியாக வலுவடைந்துள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதுள்ள வெளிநாட்டுக் கடன் சுமையிலிருந்தும் சர்வதேச நிதி நிறுவனங்களில் தங்கியிருப்பதிலிருந்தும் விடுபடுவதற்கான ஒரே வழி உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பதே என்றும் சுட்டிக்காட்டினார்.



