இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் இணையவழித் தாக்குதலுக்கு (Cyberattack) உள்ளாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை வங்கியுடன் இணைந்து பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் ‘குளோபல் ரெமிட்’ (Global Remit) என்ற சர்வதேச நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கம் தற்போது நடத்தி வரும் ஒரு விசாரணையின் காரணமாகவே இந்த நிதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா விளக்கியுள்ளார்.
இந்த சட்டப்பூர்வ விசாரணையின் விளைவாக சுமார் 5,100 இலங்கைத் தொழிலாளர்கள் தங்களது பணத்தைப் பெறுவதில் தற்காலிகச் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
எனினும், இது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல என்றும், அங்கு பணிபுரியும் ஏனைய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 11,400 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ‘குளோபல் ரெமிட்’ நிறுவனம் இஸ்ரேலிய நீதிமன்றத்தில் தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்துள்ளதுடன், உரிய தொகையைச் செலுத்துவதற்குத் தாங்களே பொறுப்பு என்றும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தூதரக மற்றும் நிறுவன ரீதியான மட்டங்களில் தலையிட்டு இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், மிக விரைவில் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, அரசியல் லாபங்களுக்காகப் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனவும், ஊடகங்கள் சரியான தகவல்களை மட்டுமே பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.



