கடல்சார் மற்றும் வான்வழி ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவடைந்துவரும் பாதுகாப்புத்துறைப் பங்காண்மை குறித்து அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடருக்கும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (22) நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது பேரனர்த்த சூழ்நிலைகளின் போதான உதவிகள், இணையப் பாதுகாப்பு, கடல்சார் மற்றும் வான்வழி ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவடைந்துவரும் பாதுகாப்புத்துறைப் பங்காண்மை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதுகுறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில், ‘உலகளாவிய வர்த்தகத்தின் சீரான இயக்கத்துக்கு இலங்கையின் துறைமுகங்களும் கடற்பிராந்தியமும் இன்றியமையாதவையாகும். அந்த நலன்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான நவீன, தொழில்வாண்மைத்துவமுடைய, ஒழுக்கமான படைகளைக் கட்டியெழுப்புவதானது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகிய இரண்டுக்குமான முதலீடாகும். அந்த முயற்சியில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அமெரிக்க பெரிதும் மதிக்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



