இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா சித்திரவதைத் தடுப்பு துணைக்குழு இரகசிய அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைத் தடுப்புக்கான துணைக்குழுவின் நான்கு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு, இலங்கைக்கு மேற்கொண்ட ஒன்பது நாள் உத்தியோகபூர்வ பயணத்தை நாளை மறுதினம் (24) நிறைவு செய்கிறது.

2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்காக கடந்த 15 ஆம் திகதி இந்த குழுவினர் இலங்கை வந்தடைந்திருந்தனர்.

இந்த குழுவினர் நாட்டின் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டதுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் சிறைத்துறை அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சித்திரவதை விவகாரங்கள் குறித்து ஐ.நா குழுவினர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத், 2024ஆம் ஆண்டின் இறுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையின் விதிகளுக்கு இணங்க, இந்த குழுவினர் தங்களது முதற்கட்ட அவதானிப்புகளை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தயாரிக்கப்படும் இறுதிப் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையும் இரகசியமாகவே பேணப்படும்.

இலங்கை அரசு அனுமதித்தால் மட்டுமே இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும்.

முன்னதாக 2019 ஆம் ஆண்டு இந்த குழுவினர் மேற்கொண்ட பயணத்தின் அறிக்கையும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.