செம்மணியில் அகழ்வு பணிகள் விஸ்தரிப்பு

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் (14) 24 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.

அகழ்வின் போது, இன்றுடன் 355 மனித என்புத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.

அவற்றுள் 341 என்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

இன்றையதினம் 07 என்புக் கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன மேலும் 02 என்புக்கூடுகள் வெளிப்பட்டதாக சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்தார்.

இவற்றில் 04 என்புகள் சிறுவர்களுடையதும், 02 வளர்ந்தவர்களுடையதும், ஒன்று குழந்தையினதும் என கண்டறியபட்டுள்ளன.

இதேவேளை, இன்று முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.