அமெரிக்காவுடன் எவ்விதமான விசேட போர் ஒப்பந்தமும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதேநேரம், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்து எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது கடுமையான இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்த பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையே விசேட உடன்பாடுகள் எட்டப்பட்டு வருவதாகப் பரவிய தகவல்களுக்கு ஈரான் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அமெரிக்கா முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் உடன்படிக்கை வரைபுகள் குறித்து ஈரானிய உயர் மட்டப் பாதுகாப்பு கவுன்சில் இன்னும் எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய நலன்களைப் பாதுகாக்கும் முடிவுகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இப்பகுதியில் நிலவும் கடுமையான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியிலும், சர்வதேச வர்த்தகத்திற்கும் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கும் மிக முக்கியமாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை கடல் வழிப்பாதையில் எந்தவொரு தடங்கலும் ஏற்படவில்லை. உலக நாடுகளின் வணிகக் கப்பல்கள் மற்றும் பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள் வழக்கம் போல் அந்தப் பாதையைப் பயன்படுத்திப் பயணித்து வருகின்றன.
இருப்பினும், அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக, இப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சர்வதேச கடற்படைக் கண்காணிப்பும் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு விவகார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



