பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக தன்னுயிரை துறந்த பொன் சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் வழமைபோன்று நாளைய தினம் (05) காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைவாக உத்தியோகபூர்வமாக உணர்வுவெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வரும் நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைய பிரதேச சபைக்குச் சொந்தமான சந்தை வளாகத்தில் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உணர்வாளர்கள், உரும்பிராய் பிரதேச இளைஞர்கள் உள்ளிட்டோர் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துவரும் நிலையில் புலனாய்வாளர்கள் ஏற்கனவே புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சமூட்டும் செயல்பாட்டில் ஈடுபட்டனர்.
தற்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நினைவேந்தல்களுக்கு தடையில்லை என அரசாங்கம் சொல்லளவில் தெரிவித்து வருகின்ற போதும் செயலளவில் நினைவேந்தல் உரிமைகளைக்கூட அங்கீகரிக்காத போக்கே காணப்படுவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.



