யுத்தக் காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்புத் தரப்பினரால் கையகப்படுத்தப்பட்ட திருகோணமலை மாவட்டக் காணிகளை, மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (04) குறித்த கலந்துலையாடல் நடைபெற்றது.
இதன்போது, இதுவரை காலம் விமானப்படை மற்றும் இராணுவத்தினரால் மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள சீனக்குடா கரமலையூற்றுப் பகுதியின் காணிகள், கடற்படையினரால் மூடப்பட்டுள்ள நிலாவெளி கோபாலபுரம் வீதி மற்றும் நிலாவெளி இக்பால் நகர் பகுதியில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீண்டும் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திரா, பாதுகாப்பு பிரதி அமைச்சரின் விஜயத்தின் பின்னர், இப்பிரச்சினைகள் தொடர்பாக பல சாதகமான தீர்மானங்களை எடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.



