போலந்து அரசாங்கம் இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாகப் முறைப்பாடளிக்க தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
ஈ-கடவுச்சீட்டு (e-passport) விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது குறித்து இன்றைய தினம் (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்றத்தில் சபாநாயகரின் செயல்பாடுகள் தற்போது நடுநிலையாக இல்லை என்று விமர்சித்தார்.
குறிப்பாக மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளைத் திசைதிருப்ப சபாநாயகர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார். நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் இழைக்கும் தவறுகளுக்கு அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்.
இது தொடர்பான முறையான விசாரணைகள் நிறைவடையும் வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பதவிகளிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க வேண்டும். இலங்கையில் தற்போது நிலவும் கடவுச்சீட்டு தட்டுப்பாட்டிற்கு அரசாங்கத்தின் முறைகேடான விலை மனு கோரல் நடைமுறைகளே நேரடி காரணம் என்றும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஈ-கடவுச்சீட்டு (e-passport) அச்சிடுவதற்காக விண்ணப்பித்திருந்த தகுதியான போலந்து நாட்டு நிறுவனம் உள்ளிட்ட ஆறு சர்வதேச நிறுவனங்களை எவ்வித நியாயமான காரணமுமின்றி நிராகரித்துவிட்டு, அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒருவருக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்க முயற்சிகின்றனர்.
இந்த நடைமுறையில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதி, போலந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாகப் முறைப்பாடளிக்க தயாராகி வருகிறது. போலந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கைக்கு எதிராகப் முறைப்பாடு அளித்தால், அது நாட்டின் சர்வதேச நற்பெயரைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும், இலங்கை உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் நிலையை உருவாக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.



